
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பகுதியில், ஒரு பிஎஸ்எஃப் (BSF) வீரர் வங்கதேச நாட்டினரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதியார் BSF முகாமுக்கு அருகிலுள்ள சாந்தினி சவுக் பகுதியில் அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பிஎஸ்எஃப் வீரர், கதாலியா கிராமம் அருகே இந்திய எல்லையை மீறி வந்த வங்கதேச நாட்டினரை தடுக்க முயன்றபோது, அவர்கள் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் உடனடியாக தெற்கு வங்க BSF அதிகாரிகளால் வங்கதேச எல்லைக் காவல்படையிடம் (BGB) தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் இரு படைகளுக்கும் இடையிலான கொடி கூட்டத்தின் (flag meeting) பின்னர், அந்த வீரர் சில மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர் பத்திரமாக இருக்கிறார் என்றும், எந்தவொரு உடல் பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்துக்கான சூழ்நிலைகளை உறுதிப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை இச்சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.