உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த கொடூர தாக்குதல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் கிராசிங் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு பொதுவெளியில் நடைபெற்றுள்ளது. இதில் நபர் ஒருவர் தரையில் விழுந்த நிலையில் உள்ளார். அவரை மற்றொருவர் ஈவு இரக்கமின்றி செங்கற்களால் அடிக்கிறார்.

ஆனால் இந்த கொடூர தாக்குதலை அருகில் நின்ற பொதுமக்கள் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். சிலர் தங்களது கைபேசியால் வீடியோ எடுத்து பதிவு செய்தது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வீடியோவில் இந்த சம்பவம் நடந்த தேதி, நாள் எதுவும் சரியாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுவெளியில் நடக்கும் இது போன்ற தாக்குதல்களுக்கு பொதுமக்கள் யாரும் உதவாமல் காணொளி எடுப்பதில் ஆர்வம் காட்டுவது சமூகத்தின் மீதான கேள்வியை உருவாக்கியுள்ளது.