இன்று நம்முடைய வாழ்க்கை முழுக்கவும் டிஜிட்டலாக மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள் முதல், சிறிய கடைகள் வரை UPI மற்றும் ரொக்கமற்ற செலுத்தும் முறைகள் எல்லா இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதை உணர்த்துகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது விரலில் பொருத்தப்பட்ட சிப் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை @beConjuror என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. அதில், ஒரு பெண் தனது விரலில் ஒரு சிறிய மைக்ரோசிப் பொருத்திய நிலையில் காணப்படுகிறார். அந்த சிப் ஸ்கேன் செய்யப்படும்போது, அந்தந்த POS இயந்திரத்துடன் தொடர்பு கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனையை முடிக்கிறது. இது ஒரு சிறிய மின்னணு சாதனம் ஆகும். இந்த வீடியோ தற்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளதுடன், பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஒரு பயனர், “இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் வரவில்லை… வந்த பிறகு என்னவாகும்?” என்கிறார். மற்றொருவர், “நாம் எந்த அளவிற்கு முன்னேறிவிட்டோம் என்பதற்கான ஒரு பெரிய உதாரணம் தான் இது” என பாராட்டுகிறார். அதே நேரத்தில், “இந்நாளில் மனித உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை… எல்லாமே மெஷின் மயமாகிவிட்டது” என வேதனைக்கும் இடம் கொடுக்கின்றனர். விரலால் பணம் செலுத்தும் இந்த நவீன கண்டுபிடிப்பு, ஒரு பக்கம் வசதியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு குறித்த சிக்கல்களையும் உருவாக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.