உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சைபர் மோசடிக்குள்ளாகியுள்ள பரபரப்பான சம்பவம் ஒன்று சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்பரா தெர்மல் ப்ராஜெக்ட் காலனியில் வசிக்கும் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் தர்மேந்திர குமார் மிஸ்ரா.

அவரிடம்  சைபர் குற்றவாளிகள் தங்கள் சூழ்ச்சியை நிகழ்த்த முயற்சித்துள்ளனர்.  அதாவது அவருக்கு “மும்பை தானே எஸ்.பி” எனக் கூறி, வாட்ஸ்அப்பில் போலியான கைது வாரண்டை அனுப்பியுள்ளனர், மேலும் அந்த வாரண்டில் ஆபாச வீடியோக்களைப் பார்த்ததாக போலி குற்றச்சாட்டை ஏற்படுத்தி, ரூ.4 லட்சம் வழங்குமாறு மிரட்டியுள்ளனர்.

இதனை பார்த்து பயந்து போன ஆசிரியர் HDFC வங்கியில் கடன் பெற முயன்றார். ஆனால், அங்கு பணிபுரிந்து வந்த அவரது முன்னாள் மாணவர்கள், அவரிடம் கடனுக்கான சரியான காரணத்தை கேட்டபோது பதில் தெளிவாக இல்லை.

அதில் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள், இது சைபர் மோசடி என உணர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இது உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கிடையில், ஆசிரியரின் மகள் தொலைபேசி திருடப்பட்டது எனவும் புகார் அளித்திருந்தார்.

அதேபோல், ஆசிரியர் வசிக்கும் வீட்டிலிருந்தே சைபர் கும்பலின் தொடர்பு நடந்தது எனவும் கண்காணிப்பு மூலம் தெரியவந்தது. உடனே  அன்பரா போலீசார் HDFC மற்றும் கனரா வங்கிகளில் உள்ள சந்தேகமான கணக்குகளை முடக்கி, பணத்தை பாதுகாத்தனர்.

அதேபோல், குற்றவாளிகள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஆசிரியரின் மொபைலை முற்றிலும் ஃபார்மேட் செய்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பிப்ரி துணை காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் கூறுகையில், “பொதுமக்கள் தெரியாத நபர்களின் அழைப்புகளை நம்பக் கூடாது.

யாரும் சைபர் மிரட்டல்களுக்கு ஆளாகினால் உடனடியாக 1930 ஹெல்ப்லைன் அல்லது காவல்துறையைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இச்சம்பவத்தில் வங்கி ஊழியர்களின் விழிப்புணர்வும், போலீசாரின் விரைந்து செயல்பாடும் இன்னொரு பெரிய மோசடியை தடுப்பதற்கு வழிவகுத்திருக்கிறது.