சிவகார்த்திகேயன் தற்போது “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் உருவாக மேஜர் முகுந்த் என்பவர் காரணமாக இருந்த நிலையில் அவர் யார்..? அவருக்கு என்ன நடந்தது..? என்பது குறித்து பின்வருமாறு பார்க்கலாம். நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படத்தில் நடித்து வருகின்றார்.  இது அவரது 21 வது படமாகும். இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கின்றது. இதில் ராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு, நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ளது. இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இது ஒரு தேச பக்தி படமாக உருவாகி உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் தீபாவளி பண்டிகையான அக்டோபர் 31ம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் ரூபாய் 55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் மேஜர் முகுந்த் பிறந்துள்ளார். இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். மேலும் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் தனது முதுகலை இயல் இதழியல் பட்டத்தை பெற்ற அவர் தனது உறவினர்கள் அனைவரும் ராணுவத்தில் இருப்பதால் தானும் அதில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் ராணுவத்தில் சேர்ந்து ராணுவ அதிகாரியாக மாறியுள்ளார்.

இதில் 10 ஆண்டுகளாக ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய முகுந்த் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி வீரமரணம் அடைந்துள்ளார். இதில் மேஜர் முகந்த் தனது 31 வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தன் உயிர் தந்ததால் நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்கரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015  ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக் கொண்டார். முன்னதாக முகுந்தின் தந்தை வரதராஜன் பேட்டி ஒன்றில் என் மகன் மேஜர் முகுந்த் இந்து பிரபாகோ வர்கீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதில் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் அதிகபட்சமாக 6 மாதங்கள் தான் செலவிட்டிருப்பார். முழுக்க முழுக்க இந்திய நாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தான் என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு ராணுவ வீரரின் கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை ராணுவ உயர் அதிகாரிகளிடம் சில பேரிடமும், மேஜர் முகுந்த் வரதராஜனோடு பணியாற்றியவர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. அதில் அவர்கள் படம் ரொம்பவே அருமையாக உள்ளது எனவும், எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறி உள்ளனர் மேலும் சிவகார்த்திகேயனும் அபாரமாக இப்படத்தில் நடித்துள்ளார் என்றும் கூறினர்.