
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் “ட்ரீம் லைனர் 787” பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் விமானம் விழுந்த பகுதி யில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில், அங்கு இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விமானத்தை ஓட்டி சென்ற விமானிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேப்டன் சுமித் மற்றும் கமாண்டர் பிரல் கிளைவ் இருவரும் விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இதில் மும்பையை சேர்ந்த சுமித் சுமார் 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் மிக்க விமானி ஆவார்.
அதேபோன்று கமாண்டர் கிளைப் 1100 மணி நேரம் விமான பயண அனுபவம் பெற்றவர். மேலும் அந்த விபத்தில் மும்பையில் உள்ள பன்வெல்லை பகுதியை சேர்ந்த மைதிலி பாட்டில் (23) உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அதேபோன்று மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா ஊழியர் அபர்ணா மகாதிக்கும் (42) அந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டம் பத்லாப்பூரில் வசித்து வரும் ஏர் இந்தியா விமான ஊழியர் தீபக் பாதக் என்பவரும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.