
சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24) என்ற மகள் மற்றும் ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பதவியில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வெளியில் சென்ற ரமேஷ் வீட்டிற்கு போன் செய்து பார்த்ததில், அவர்கள் இருவரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரமேஷ் குமார், வீட்டிற்கு பக்கத்தில் உள்ள உறவினருக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனே அவர் வீட்டுக்கு சென்று பார்த்ததில், வீட்டின் கதவு திறந்த நிலையில், யாரையும் காணவில்லை. பின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு ‘ஹார்ட் டிஸ்க்’ மாயமாகி மற்றும் கார் ஒன்றும் காணாமல்போய் இருந்தது. மேலும் இது பற்றி ரமேஷ் குமாருக்கு தெரிவித்தவுடன், அவரும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.
இந்நிலையில் பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு போலீசார் இருவரின் செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தை சோதனை செய்ததில், ஆந்திர மாநிலம் வரதையாபாளையத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே மர்ம ஆசாமிகள், காருடன் அவர்கள் இருவரையும் ஆந்திரா நோக்கி கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேற்று இரவு நேரில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.கல்யாண் விசாரணை நடத்தியதில், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கவுன்சிலர் மகனுடன் தப்பி வந்தது தெரிந்தது. இந்நிலையில் போலீசார் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.