
உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு சேர்ந்து சரண் சிங்கை கடந்த 2014ம் ஆண்டு சுட்டுகொலை செய்தனர். இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்து 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் கடைசி விசாரணை கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.
அதோடு அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது ராமாயணத்தை குறிப்பிட்டு, ராமர் வனவாசம் சென்ற போது அவரது சகோதரர் அரியணை ஏற மறுத்தார். அதனால் ராமனின் செருப்பை அறியணையில் வைத்து ஆட்சியை நடத்தினர். இது இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பை காட்டுகிறது. ஆனால் நீங்கள் ஒரு நிலத்திற்காக உங்கள் சகோதரரை கொன்று உள்ளீர்கள். நீதி, உண்மை மற்றும் கண்ணியத்தின் பாதையில் செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், ஒரு குடிமகன் கண்ணியத்தை மீறினால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.