கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தினமும் காலை  மெஜஸ்டிக் இல் இருந்து ஜே.பி நகர் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பணிக்கு செல்பவர்கள் என பல்வேறு பகுதியில் இருந்து இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறும் பெண்களை தகாத முறையில்  வீடியோ எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ நாளன்று காலை 9 மணிக்கு அந்த மெட்ரோ ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவரை அவருக்கே தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இதனை அதே ரயிலில் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஊழியர்கள் கவனித்துள்ளனர். இதை கவனித்தவர்கள் அந்த நபரை ஓடும் ரயிலிலேயே மடக்கிப் பிடித்து அவரிடம் உள்ள செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். பின்னர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவரை மெட்ரோ பாதுகாப்பு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில் அந்த நபரின் பெயர் மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவர் இதேபோன்று தொடர்ந்து தினமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது செல்போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. மேலும் அந்த நபரை காவல்துறை பாதுகாப்பில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடன் தவறான செயலில் ஈடுபட்ட மகேஷுக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.