தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார்.

அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான் சாலையில் பைக் சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் தார் கலவை ஏற்றி வந்த லாரி திடீரென அவர்கள் பைக் மீது மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா, அனிஷா மற்றும் கைக்குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் நின்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஆத்திகுளம் சாலை வழியாக தனியார் கிரஷர் லாரிகள், கல்குவாரி லாரிகள் அதிக அளவில் வேகமாக செல்கின்றன.

இதனால் இந்தப் பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது என பொதுமக்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்த கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் இவற்றை மாற்று வழியாக இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.