தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர்களுக்கென பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2021- 2022 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு கால்நடைகளின் எண்ணிக்கை உயரவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் புதிய பண்ணைகள் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பன்றி வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு ரூபாய் 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது.

நாட்டுக்கோழி பண்ணை உடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூபாய் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையும் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும் விலங்குகளின் தீவனங்களான வைக்கோல், ஊறுகாய்புல்,  மொத்த கலப்பு உணவு தீவனத் தொகுதி மற்றும் தீவன சேமிப்பு பண்ணை போன்றவை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பண்ணைகள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் https://nlm.udyamimitra.in/ என்ற  இணையதளத்தின் கீழ் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.