கனடாவின் டொராண்டோ நகரில், இரண்டு கத்திகளை ஏந்திய நிலையில் ஒரு நபர் போலீசாரால் தாக்கப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் வழங்கியுள்ளனர். @l3v1at4an என்ற X பயனர் பகிர்ந்த காணொளியில், ஒரு தாடி வைத்த நபர், இரு கைகளிலும் பெரிய கத்திகளை பிடித்தபடி, இரண்டு போலீசாரால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது.

 

வீடியோவில், ஒரு அதிகாரி மெதுவாக பின்னால் வந்து, நபரின் கவனத்தைத் திருப்பியபின், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை தாக்குகிறார். உடனே அந்த நபர் கத்திகளை தரையில் போட்டுவிட்டு தரையில் வீழ்கிறார். பின்னர், மூன்றாவது அதிகாரி விரைந்து வந்து அவரை அடக்கி, கைவிலங்குகளை போடுகிறார். இந்த சம்பவம் குறித்து, வெள்ளிக்கிழமை காலை 9:45 மணியளவில் ப்ளூர் தெருவிலும், பவுலின் அவென்யுவிலும், இரண்டு கத்திகளை ஏந்தி நடமாடும் நபர் குறித்து ஒரு தகவல் போலீசாருக்கு கிடைத்திருந்தது.

9:54 மணிக்கு அந்த நபர் கைது செய்யப்பட்டதாக கான்ஸ்டபிள் விக்டர் சாருடி கூறினார். அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மீறியதால், தாக்குதல் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். பிடிபட்ட 31 வயது நபர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்கான 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதேசமயம், அந்த நபரின் பெயர் தற்போது பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.