
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் மாணிக்கஹள்ளியை சேர்ந்த ஆசிரியை கொலைக்கு அவரது தந்தை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அன்று மாணிக்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை தீபிகாவை அதே கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் என்ற இளைஞர் கொலை செய்து உடலை புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு பழி வாங்கும் நோக்கில் தீபிகாவின் தந்தை வெங்கடேஷ் நிதிஷின் தந்தையான நரசிம்மஹே கவுடாவை கத்தியால் பலமுறை தாக்கி கொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் முழுவதும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் “உன் மகன் என் மகளை கொலை செய்தான். எனக்குள்ள கோபம் இன்னும் தணியவில்லை” என்ற குரலும் பதிவாகியுள்ளது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இது பழிவாங்கும் நோக்கில் நடந்த கொலை சம்பவம் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குற்றவாளியான வெங்கடேஷை காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.