ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் டொனால்ட் சாம்ஸ்(91) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்நாட்டைச் சேர்ந்த 42 பேருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் சுல்தான் கஞ்ச் பகுதியில் இருந்து பீகாரின் பாட்னா நோக்கி கங்கை ஆற்றின் வழியாக பயணித்துள்ளனர். அப்போது டொனால்டுக்கு உடல்நலம் குன்றி, முங்கர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதோடு ஆஸ்திரேலியா தூதரகம் மற்றும் டொனால்டின் மனைவி அலைஸ்  சாம்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்துவரான டொனால்டின் உடலுக்கு அலைஸ் ஒப்புதல் உடன் இந்தியாவில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதற்கு பாதிரியார் ஒருவரை இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்து, சுராம்பா பகுதியில் கிறிஸ்தவ முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு இந்தியாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு அவருடைய உயிலே காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து  அவரது மனைவி கூறியதாவது, பிரிட்டிஷ் ஆட்சியின் போது டொனால்டின் தந்தை அசாமில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் அசாமுக்கு அவர் சென்று விடுவார். இதுவரை மொத்தம் அவர் 12 முறை  இந்தியாவுக்கு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் கங்கை ஆற்றின் வழியாக தான் பயணம் செய்துள்ளார். இந்தியாவின் மீது கொண்ட அன்பால், அவருடைய இறுதி சடங்குகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்று அவரது உயிலில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆசையின்படி இந்தியாவிலேயே டொனால்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.