டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான்.

சிறுவனின் தாய் தனது வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் செய்தார். இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் ஒரு தங்க மோதிரம் காணாமல் போயிருந்தன. போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த நகைகளை இரண்டு தங்க நகைக் கடைகளுக்கு விற்றது தெரியவந்தது. அந்த நகைக் கடைகளில் ஒருவரான கமல் வேர்மா கைது செய்யப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் உள்ளேயோ வெளியேயோ யாரும் வந்ததற்கான தடயங்கள் CCTV காட்சிகளில் இல்லை. இதனால், வீட்டில் உள்ளவர்களே திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திருட்டு நடந்த நாளிலிருந்து சிறுவன் காணாமல் போனது தெரியவந்தது.

சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் 50,000 ரூபாய்க்கு ஒரு புதிய ஐபோன் வாங்கியிருந்தான். போலீசார் பல இடங்களில் சிறுவனை தேடினர். இறுதியாக, ஒரு தகவலின் பேரில் சிறுவனை கைது செய்தனர்.

சிறுவன் விசாரணையில், தான் 9-ம் வகுப்பு படிப்பதாகவும், தந்தை இறந்துவிட்டதாகவும், படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தான். அவனுக்கு அவன் படிக்கும் வகுப்பிலேயே ஒரு பெண் நண்பர் இருந்ததாகவும், அவளை மகிழ்ச்சிப்படுத்தவே இந்த செயலை செய்ததாகவும் கூறியுள்ளான்.