
க்ஷஆப்பிரிக்காவில், சவன்னா யானைகள் அதிகமாகக் காணப்படும் பகுதியாக போட்ஸ்வானா நாடு முன்னிலையாக உள்ளது. இங்கு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் வசிக்கின்றன. சுமார் மூன்றில் ஒரு பங்கு சவன்னா யானைகள் இந்நாட்டில் வாழ்கின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாவது அதிக யானைகளை கொண்டுள்ள நாடாக ஜிம்பாப்வே இருக்கும் நிலையில், அங்குள்ள Save Valley வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2,500க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன எனத் தெரியவந்தது.
இத்தனை யானைகளை அந்த சரணாலயப் பகுதியில் பராமரிக்க இயலாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுற்றுச்சூழல் திறனுக்கேற்ப 800 யானைகள் இருந்தாலே போதுமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, முதற்கட்டமாக 200 யானைகள் வேறு சரணாலயங்களுக்கு மாற்றப்பட்டன. இருப்பினும் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது என அரசாங்கம் தெரிவித்து, தற்போது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அவைகளின் மாமிசத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு தொடர்பாக விளக்கமளித்த அரசு, யானைகளின் தந்தங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு மேற்கொண்ட இந்த முடிவு உலகளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. யானைகளை வேட்டையாடும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விலங்குகளை கொல்லாமல் மாற்று வழிகளில் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.