திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்.

ஜூன் 16 ஆம் தேதி இரவு, அந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தின் வழியாக முகமூடி அணிந்த ஆறு பேர் கொண்ட கொள்ளையர் கும்பல் வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் சத்தம் இல்லாமல் வீட்டின் உள்ளே மறைந்துவிட்டு, உள்ளே யாராவது வருகிறார்களா என்று கண்காணித்தனர்.

அதே நேரத்தில் வெளியே சென்று வந்திருந்த அழகப்பன் வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்த போது, அவரை உடனடியாக மடக்கிப்பிடித்த அந்த கும்பல், “உன் வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. பணத்தை ஒழுங்காக எங்களுக்கு கொடு” என்று கூறி, கத்தியால் இடது காலில் குத்தியும், வாயில் கிழித்தும் கொடூரமாக தாக்கினர்.

அழகப்பனை தாக்கிய பின்னர், வீட்டின் அனைத்து அறைகளிலும் தேடினர். இந்த சத்தத்தை கேட்டு மேல்மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய தாய் சொர்ணம், அலறிக் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் மேல்மாடிக்கு சென்று அவரை மாடிப்படியில்  இழுத்துவந்து கீழே கொண்டுவந்து விட்டான்.

இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பயங்கர ஆயுதங்களால் மிரட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். “காப்பாற்றுங்கள்!” என தாயார் சொர்ணம் அலறிக் கூவியதும், அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் திரண்டு வரத் தொடங்கினர். இதைக் கண்டு பயந்த கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர்.

அப்பொழுது பொதுமக்கள் துரத்திச் சென்றனர். அவர்களில் ஒருவர், மதுரை மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை பிடித்தனர். போலீசாருக்கு ஒப்படைத்ததும், “இவனை யாரும் அடிக்க கூடாது… நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என கூறிய போலீசாரின் நடவடிக்கையால், பொதுமக்கள் கலைந்தனர்.

ஆனால் அதே நேரத்தில், அந்தக் கொள்ளையன் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த அழகப்பன் தற்போது நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தப்பியோடிய மற்ற நால்வர் மற்றும் கைதிலிருந்தே தப்பிய பிரபாகரனை பிடிக்க நத்தம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.