
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்த நிலையில் அந்தப் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் 2012 ஆம் ஆண்டு சீமான் மீது அவர் புகார் கொடுத்தார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பலாத்காரம் செய்ததோடு 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் விஜயலட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் சீமானின் மனுவை ரத்து செய்ய முடியாது என்று கூறியதோடு இந்த வழக்கு மிக தீவிரமானது என்றும் 12 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை வளசரவாக்கம் போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராக மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமி வீட்டிற்கு நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார் கிட்டத்தட்ட 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதோடு சீமானுக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீமானுக்கு கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.