
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் வெற்றி பெற முடியாமல் தவிப்பதால், அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகின்றது என ஈரான் தலைவர் கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கமேனி கூறியதாவது, “இஸ்ரேலின் இயலாமை தற்போது உலகமெங்கும் தெரிய வருகிறது. 7 நாட்களாக தாக்கியும், ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி மையமாகக் கருதப்படும் ‘ஃபர்தோ’ நிலையத்தை இஸ்ரேல் தொட முடியவில்லை. மலைகளின் நடுவே நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த மையத்தை தாக்க இயலாமல் இஸ்ரேல் திணறி வருகிறது,” என்றார்.
இஸ்ரேல், ஃபர்தோ அணு மையத்தை தாக்க அமெரிக்காவின் MOP (Massive Ordnance Penetrator) ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்துவதாகக் கமேனி கூறினார். இந்த ஏவுகணைகள் மட்டுமே அந்த அளவுக்கு ஆழத்தில் தாக்கும் திறனைக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், “ஈரானின் பதிலடி இஸ்ரேலில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா தற்போது தனது போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இது, இஸ்ரேலின் பாழடைந்த நிலையை காட்டுகிறது,” என்றும் கமேனி தெரிவித்தார்.
அமெரிக்கா நேரடியாக போரில் இறங்குமா?
நிலமை தொடர்ந்து மோசமாகிவருவதால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம், அமெரிக்காவை நேரடியாக போருக்கு இழுத்துச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இது உலக நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரான் மக்கள் கடந்த காலங்களில் காட்டிய மன உறுதியை தொடர்ந்து காட்ட வேண்டுமெனவும், அச்சத்துடன் அல்லாது தைரியத்துடன் நிலையை எதிர்கொள்வது கடமை எனவும் கமேனி தனது உரையில் உறுதியளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா நேரடியாக ஈரானுக்கு எதிராக போரில் இறங்குமா? என்பது முக்கியமான கேள்வியாக தற்போது உலக அரசியல் சூழலில் வட்டாரங்களை கலக்கியுள்ளதென குறிப்பிடப்படுகிறது.