தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக முத்துக்குமாரி (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் முத்துக்குமாரி கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருச்சியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் முத்துக்குமாரி 4 மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவன் முத்துபாண்டியனுடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டிற்கு வந்த நிலையில் அவர் தன் மனைவியை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் அவருக்கு தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முத்துக்குமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகாரின் படி போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் தற்போது அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முத்துக்குமாரி உயிரிழந்தது தெரிய வந்த நிலையில் அவரது கணவர் முத்து பாண்டியனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல அவர் நாடகமாடியுள்ளார். மேலும் முத்துப்பாண்டியனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.