புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி முகப்பு ஊர் பகுதியில் கூலி தொழிலாளியான பாரதிராஜா என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கீர்த்திகா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் கவின் என்ற மகன் இருக்கிறார். இதில் திருமணத்தின்போது கீர்த்திகாவுக்கு 4 சவரன் தங்க நகைகள், ஒரு பைக் மற்றும் சீர்வரிசை பொருட்கள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீர்த்திகாவிடம் அவரது கணவரும் மாமியார் ராக்கம்மாளும் சேர்ந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு கீர்த்திகாவை அவர்கள் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கீர்த்திகா தன் தாயாரை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன் மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது கீர்த்திகாவின் தாய் வெள்ளையம்மாள் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.