சமூக ஊடகங்களில் பேக் ஐடிகளை உருவாக்கி, 300  பெண்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பின்னர்  பிளாக்மெயில் செய்த 25 வயதுடைய பாதுகாப்பு பணியாளரை தாஹிசார் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சுபம் குமார் சிங், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது கர்நாடக மாநிலம் சண்டூரில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மகளிர் கல்லூரி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி, தாஹிசார் போலீசில் புகார் அளித்தார். அதில், அறியாத நபர் ஒருவர் தன் பெயரில் பல இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி, அவற்றில் அவமதிக்கும் விதமாக கட்டுரைகள் மற்றும் ஆபாச பதிவுகள் போட்டு வந்ததாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், தாஹிசார் போலீசார் Facebook மற்றும் Google-இன் உதவியுடன் குறித்த பேக் கணக்குகளின் IP முகவரிகளை சேகரித்தனர். அதன் அடிப்படையில், குற்றவாளி கர்நாடக மாநிலத்தின் சண்டூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தாஹிசார் சைபர் செல் இன்ஸ்பெக்டர் அங்குஷ் டாண்ட்கே தலைமையிலான போலீஸ் குழு கர்நாடகா சென்று சுபம் குமார் சிங்கை கைது செய்தனர். சுபம் தனது மொபைல் போனில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பேக் மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மின்னஞ்சல் ஐடிகளின் மூலம் பெண்களின் பெயரில் தனியாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் பிளாக்மெயில்  செய்துள்ளார். குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுபம் குமார் சிங்கிற்கு எதிராக, பாரதிய நயா சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 78 மற்றும் 79, மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 (C) மற்றும் 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2015 – 2016 காலப்பகுதியில் டெல்லியில் சாஃப்ட் ஸ்கில் கணினித் திறன் பயிற்சி முடித்துள்ளார் என்பது போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூன் 16ஆம் தேதி வரை போலீஸ்  காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தாஹிசார் காவல் நிலையம் தெரிவித்துள்ளது