அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் வசித்து வருபவர் ஷெரி ஹைட் (71). இவரது வீடு மோர்கன் நகரில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை இவரது வீட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்த ஒரு நபர் இவரது வீட்டின் அருகில் சென்றதும் ஒரு பூனை இறந்த நிலையில் காணப்பட்டதோடு வீட்டின் உள்ளிருந்து தாங்க முடியாத அளவு நாற்றம் வீசுவதை கவனித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ஹைட் வீட்டில் சோதனை செய்துள்ளனர். இதில் இவரது வீட்டில் 22 பூனைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 8 பூனைகள் வெவ்வேறு அறைகளிலும், மேலும் 14 பூனைகள் குளிர்சாதன பெட்டியிலும் பாதுகாக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். ஆனால் வீட்டில் ஒரு பூனை மட்டுமே உயிருடன் இருந்தது. இதனை மீட்டு விலங்கு பாதுகாப்பு அமைப்புகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து ஹைட் மீது உயிரினங்கள் மீதான கொடூர நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது குறித்து ஹைட்டிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பாட்டன் ரூஜ் நகரில் இருந்து பூனைகளை வளர்க்கும் நோக்கில் வாங்கியதாக தெரிவித்துள்ளார். தற்போது  சிறையில் ஹைட் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.