
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் கற்கைனா பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணுக்கு வீட்டுக்கு அருகிலேயே கை வைத்தியம் பார்த்துள்ளனர். ஆனாலும் வயிற்று வலி குறையாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது பெண்ணின் வயிற்றுக்குள் நிறைய முடி இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுடைய முடி அகற்றப்பட்டது.
வயிற்றுக்குள் முடி எப்படி சென்றது என கேட்டபோது குடும்பத்தினர் தெரியவில்லை என கூறியுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. என்னவென்றால் அந்த பெண் ரகசியமாக முடியை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். சுமார் 16 வருடங்களாக தனது முடியை யாருக்குமே தெரியாமல் சாப்பிட்டது தெரியவந்தது.
அந்த பழக்கத்தை இளம்பெண் நீண்ட காலமாக தொடர்கிறார். இதனால் அவருக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து முடியை அகற்றியுள்ளனர். இளம்பெண்ணின் உடல் மற்றும் மனநிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் டாக்டர்கள் மற்றும் இளம் பெண்ணின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.