
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர். அந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் எதிரே ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.
திடீரென அந்த பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சொகுசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேருந்துகளும் தீப்பற்ற ஆரம்பித்தது. அந்த பேருந்துகளுக்குள் இருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.
அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.