
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த ரேவதி அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகே மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். மோகனும், ரேவதியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவதி மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு 9:30 மணிக்கு குளித்துறை வந்தார்.
பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மோகன் வீட்டில் விடுவதாக கூறி ரேவதியை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ரேவதியின் வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டிற்கு காரை ஓட்டி சென்று வலுக்கட்டாயமாக ரேவதியை தனது வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சமயம் மோகனின் குடும்பத்தினர் வீட்டில் இல்லை.
இதனையடுத்து கதறி அழுத ரேவதியிடம் இதை யாரிடமாவது கூறினால் உன்னையும் உனது பிள்ளைகளையும் கொலை செய்து விடுவேன் என மோகன் மிரட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு மீண்டும் ரேவதியை காரில் ஏற்றி சென்று அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு மோகன் தப்பி சென்றார்.
இதுகுறித்து ரேவதி தனது கணவரிடம் கூறியதுடன் நியாயம் கேட்பதற்காக மோகனின் வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்து மோகனின் சகோதரி செருப்பால் ரேவதியை அடித்து சரமாரியாக கீழே தள்ளி வயிற்றில் மிதித்தார்.
இதனால் காயமடைந்த ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.