
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை திரு. பீட்டர் ஜான்சன் அவர்கள் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1-ம் தேதி தடுப்பணையில் இருந்து தவறி விழுந்த மனோ என்ற 17 வயது சிறுவனையும் விக்னேஷ் என்ற 12 வயது சிறுவனையும் பீட்டர் ஜான்சன் காப்பாற்றினார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
இந்த துயரமான செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.