அகமதாபாத்தில் ரயில்வே கிராசிங்கிற்கு அருகே மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடையை நடத்திவரும் 36 வயதுடைய கமலேஷ் சந்தானி என்பவர் , ரூ.50 லட்சம் பணம் தர மறுத்ததற்காக கம்பு, கத்திகளுடன் வந்த 10 பேர் கொண்ட குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் நடந்தது. இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட கமலேஷ், கோடாசர் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறார். ஜெய் காத்வி மற்றும் விஷால் என்கிற உலியோ தலைமையிலான குழுவினர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து, கமலேஷை தாக்கியுள்ளனர். விஷால், கமலேஷின் வலது கன்னத்தில் கத்தியால் குத்தியதுடன், சிமென்ட் கட்டையால் தாக்கினார். காத்வியும் கம்பால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது கமலேஷ் கீழே விழுந்த நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் கடை பாதுகாப்பு காவலர் அவரைக் காப்பாற்றினர்.

 

மே 2ஆம் தேதி நைனிடாலில் சுற்றுப்பயணத்தில் இருந்த கமலேஷிடம், காத்வி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, “தொடர்ந்து கடையை நடத்த விரும்பினால் ரூ.50 லட்சம் தர வேண்டும்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், பணம் தராவிட்டால் கடையை அழித்து, கமலேஷின் கைகால்களை உடைப்பதாகவும் மிரட்டினார். இந்நிலையில் அவர் அகமதாபாத்திற்கு திரும்பிய ஜூன் 8ஆம் தேதி, அதிகாலை 2 மணியளவில் திட்டமிட்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஜெய் காத்வி, விஷால், அர்ஜுன் சிங் ஜடேஜா உள்ளிட்ட 9 பேர் மீது குஜராத் போலீஸ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது போலீசார் குற்றவாளிகளை தேடி  வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.