
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான சாமியார் சுவாமி பிரதிபாந்தா. இவர் இந்த வருடம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசிடம் இருந்து பெற்றார். இந்நிலையில் தற்போது சுவாமி பிரதிபாந்தா மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் தலைவராக இருக்கிறார். இவர் ஆசிரமத்தில் உள்ள பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முதலில் அந்தப் பெண் சுவாமியை சந்தித்த நிலையில் பின்னர் அவர் ஆசிரமத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண்ணை ஆசிரமத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்து தினசரி ஐந்தாவது மாடிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி சுவாமி அனுப்பிய நிலையில் திடீரென அவர் கர்ப்பமடைந்ததால் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பும் செய்துள்ளனர். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மருத்துவர்கள் முன்னிலையில் ஆசிரமத்தின் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்தனர்.
அந்த ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளுக்கு அழைத்துச் சென்று பல வருடங்களாக இந்த வன்கொடுமை சம்பவம் தொடர்ந்த நிலையில் இந்த வன்கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் வேதனையோடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் பெண் கடைசியாக கடந்த 12ஆம் தேதி சாமியாரை தொடர்பு கொண்ட நிலையில் அவர் ஜூன் 13ஆம் தேதி ஒரு இடத்திற்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த பெண் அங்கு சென்ற நிலையில் அங்கிருந்த இரண்டு பேர் இனிமேல் சாமியாரை தொடர்பு கொள்ளக்கூடாது என மிரட்டி அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
மேலும் இதையெல்லாம் அந்தப் பெண் தன்னுடைய புகாரில் கூறியுள்ள நிலையில் சுவாமி தன் மீதான புகார்களை மறுத்ததோடு இதையெல்லாம் பொய் குற்ற சாட்டு என கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.