
தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த தம்பதியினர் மூத்த மகனான குமாரை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் கோபத்தில் குமார் வீட்டை விட்டு வெளியே சென்றதால் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் குமாரை கண்டுபிடிக்க இயலவில்லை. மகன் காணாமல் போன வருத்தத்தில் சிறிது ஆண்டுகள் கழித்து நடராஜனும் உயிரிழந்தார்.
அதன் பிறகு ருக்மணி தனது 2-வது மகன் செந்திலுடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார். முருகன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். 12 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்ற குமார் மும்பை, ஆந்திரா, காஷ்மீர் ஆகிய இடங்களில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகளாக அங்கேயே இருந்துள்ளார். குமாரின் குணம் ஆறுமுகத்திற்கு பிடித்துப் போனது.
இதனால் தனது பேத்தியை திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமும் நடந்து விட்டது. பல ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர விரும்பிய குமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சொந்த ஊருக்கு சென்றார்.
40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை பார்த்ததும் ருக்மணி கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு குமார் தனது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.