தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணுக்கிளி . இவருக்கு 67 வயது ஆகிறது. இவரது மகனும் மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்து வந்தார்.

அவருக்கு மூதாட்டி தனது சொத்துக்களில் சில பங்குகளை எழுதி வைத்துள்ளார். அதன் பிறகு அவர் மூதாட்டியை சரியாக கவனிக்காததால் சொத்துக்களை திரும்ப தருமாறு கேட்டதோடு, மூதாட்டி  காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

மூதாட்டி விருப்பத்துடன் சொத்தை அவரது பெயருக்கு எழுதி கொடுத்ததால் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. சம்பவம் நடந்த அன்று கிராமத்திற்கு வெளிப்புறம் மூதாட்டி ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த நபரின் 17 வயது மகன் தனது நாய்க்குட்டியை தேடி அங்கு சென்றுள்ளார்.

அப்போது மூதாட்டி 17 வயது சிறுவனை தகாத வார்த்தையால் திட்டியதால் கோபமடைந்த சிறுவன் இரும்பு கம்பியால் மூதாட்டியை தாக்கினார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மண்ணில் புதைத்து விட்டு சிறுவன் தப்பி சென்றான்.

இந்த கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 10 மாதங்களாக போலீசார் திணறி வந்தனர். நேற்று முன்தினம் சிறுவன் குழந்தைகள் நல உதவி எண்ணை தொடர்பு கொண்டு நான் தான் மூதாட்டியை கொலை செய்தேன்.

என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை. முதலில் நிம்மதியாக இருந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு வாழ்க்கை நரகமாக மாறிவிட்டது. போலீஸ் கிராமத்திற்கு வரும்போது பயந்து பயந்து வீட்டிற்குள் சென்று விடுவேன். யாராவது கதவை தட்டினால் கூட பயந்து நடுங்குவேன்.

இந்த நரகத்தை என்னால் அனுபவிக்க முடியாது என கூறி சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டான். அவரை போலீசார் நீதிமன்றத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.