தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில் நேற்று காலை அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதனால் மருத்துவமனை ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மோனிகா அசைவற்ற நிலையில் கிடந்தது தெரியவந்தது.

பின்னர் ஒரு மருத்துவர் பரிசோதனை செய்தபோது மோனிகா இறந்தது தெரிய வந்தது. அவரது அறையில் இருந்து மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் அதில் சம்மதம் இல்லாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தவறான ஊசிகளை உடம்பில் செலுத்தி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அவரது கைப்பையில் இருந்து 40 தூக்க மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை பிறகு தெரியவரும் என்று கூறப்படுகிறது.