
மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஜெயலட்சுமி தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில் விட்டு விட்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றார்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து செல்போன் உபயோகப்படுத்திய ஜெயலட்சுமியின் மகளை செல்வராஜ் குடும்பத்தினர் கண்டித்தனர். உடனே அந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி செல்வராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை திட்டியதாக தெரிகிறது.
கடந்த 30-ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயலட்சுமிக்கும் செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வராஜ் ஜெயலட்சுமியை தாக்கியதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசில் அளித்ததால் செல்வராஜும், அவரது மகன் சூர்யாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமியை பார்க்க சென்றுள்ளனர். அங்கு வைத்து ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனை சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் செல்வராஜையும், அவரது மகன் சூர்யாவையும் அதிரடியாக கைது செய்துள்ளார். மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வரும் பெண்ணை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.