பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பெல்ஹா காட் பகுதியில் செயல்படும் பி.எஸ். பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பயங்கர சம்பவம் ஒன்றால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ராகேஷ் குமார் என்பவர் தனது இரு மகன்களையும் கல்விக்காக இப்பள்ளியில் சேர்த்திருந்தார். அதில், இளைய மகன் உஜ்வல் குமார் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காணவில்லை. இது குறித்து அவரது மூத்த சகோதரர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, சந்திக்க அனுமதிக்க மறுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் மாணவனின் தாயிடம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்‌. அவர்கள் சொன்னபடி பள்ளி கட்டணம் செலுத்தியதும் ஒரு ஆசிரியருடன் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த அறைக்குள் சென்ற தாய், தனது மகன் இறந்த நிலையில் கிடப்பதை கண்டதும்  அதிர்ச்சியில் மூழ்கினார். மாணவனின் உடலை பள்ளி நிர்வாகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறி, பின்னர் ஆம்புலன்சில் வீட்டிற்கு அனுப்ப முயற்சித்தது.

இதனைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை மற்றும் கிராம மக்கள் பள்ளிக்குச் சென்றபோது, பள்ளி ஊழியர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.