
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்காம் நாள் தொடரில் உலகமே எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்துவரும் நிலையில் ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் 15 ரன்களை கடந்த போது ஒரு இமாலய சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமாரா சங்ககாரா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் தற்போது விராட் கோலியும் படைத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்சில் 14,000 ரன்களை கடந்த நிலையில் சங்ககாரா 378 இன்னிங்ஸில் 14000 ரன்களைக் கடந்தார். ஆனால் விராட் கோலி 287 இன்னிங்ஸில் 14,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.