ஓடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் காஷிபுர் பிளாக்கில் உள்ள பெய்கனகுடா கிராமத்தில் நடந்த சம்பவம் சமூக வலையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த  (Scheduled Tribe)  பெண் ஒருவர், வேறு  சாதி வாலிபரை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மீது “பாவம் தீர வேண்டி” பவித்ரிகரிப்பு சடங்கு செய்யப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேருக்கு மொட்டையடிக்கப்பட்டது. அவர்களை சமூக முற்றுகைக்கு உள்ளாக்கும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சடங்கின் ஒரு பகுதியாக, பன்னாடி தெய்வத்திற்கு ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட மிருகங்கள் பலியாக்கப்பட்டன. இதுவே அந்த சமூகத்தில் பரம்பரை வழக்காக கடைபிடிக்கப்பட்டுவரும் பழக்கமாகும் என்று மூத்தோர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திருமணம் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பம் தங்கள் பிழையைத் தீர்த்துக்கொள்ள இந்த சடங்கில் ஈடுபட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்தால் ஊரை விட்டு ஒதுக்கி  வைக்கப்படுவார்கள்.

 

+

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை குழுவை அமைத்தது. காஷிபுர் பிளாக் அபிவிருத்தி அலுவலர் (BDO) தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அவரது அறிக்கையில், “இது கிராம நெறிமுறையின்படி, எந்தவொரு தனிப்பட்ட அழுத்தமும் இல்லாமல், குடும்பத்தினரின் விருப்பத்தின்படி நடந்த நிகழ்வு” என இருபுறத்தையும் சந்தித்த பிறகு தெரிவித்தார். மேலும் இது சமூக அழுத்தத்தில் தோன்றிய கட்டாய நடவடிக்கை என சில சமூக ஆர்வலர்கள் சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.