மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள விதான் பவனில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்காக நடைபெற்ற பவள விழா நிகழ்ச்சியில் ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழா இரு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட பட்ஜெட் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.

விருந்தினர்களுக்கு ரூ.500 மதிப்புடைய வெள்ளித்தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. ஒரு விருந்துக்கான மதிப்பீடு ரூ.5 ஆயிரம் என கூறப்படுவதால், ஒரே நேர விருந்துக்கு ரூ.27 லட்சம் வரை அரசுச் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் அரசுக்கு பல தரப்புகளிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் வெட்டிவார் கண்டனம் தெரிவித்து, “திவாலாகி வரும் நிலையில் இருக்கும் மகாராஷ்டிரா அரசு இவ்வளவு பணத்தை ஆடம்பர விருந்துக்காக எப்படி செலவழிக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமூக செயற்பாட்டாளர் கும்பார் கூறியதாவது, “இந்த விழாவிற்காக 40 அடி பேனர், தாஜ் ஹோட்டலில் தங்குமிடம், ஏ.சி அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிக்கனத் தத்துவத்தை பேசும் குழுவே இவ்வளவு வீண்பணச் செலவில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதேவேளை, அரசு தரப்பில் இது வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டுகள் மட்டுமே என்றும் உணவிற்கான விலை குறைவானதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை முழுமையான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.