மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தின் கத்திராஜ் பகுதியில் உள்ள சோனவணே அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், 4 வயது சிறுமி ஜன்னலில் இருந்து கீழே விழப்போகும் தருணத்தில் விடுமுறையில் இருந்த தீயணைப்புத்துறை வீரரின் துணிச்சலான மற்றும் நேர்த்தியான செயல்பாடால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.06 மணியளவில் நிகழ்ந்தது.

அந்தக் கட்டடத்தில் வசிக்கும் யோகேஷ் சவான் என்ற தீயணைப்புத் துறை வீரர் திடீரென சத்தம் கேட்டதையடுத்து தன் வீட்டின் பால்கனிக்கு வந்து பார்த்தபோது, பாவிகா சந்தானே (வயது 4) என்ற சிறுமி மூன்றாவது மாடியில் உள்ள படுக்கையறை ஜன்னலில் இருந்து  தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பதறி விட்டார். உடனே அவர் கீழே ஓடி அந்த வீட்டின் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால், பாவிகாவின் தாயை அழைத்துச் சென்று கதவை திறக்கச் செய்தார். குழந்தையின் தாய் அந்த நேரத்தில் மற்றொரு குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு விட்டுவிட்டு வந்து கதவைத் திறந்தவுடன், யோகேஷ் உள்ளே சென்று ஜன்னலில் சிக்கியிருந்த சிறுமியை கையால் பிடித்து மேலே தூக்கி பாதுகாப்பாக மீட்டார்.

சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவின் மூலம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. பாவிகாவை காப்பாற்றிய யோகேஷ் சவானின் வீரச் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். “ஒரு நிமிடம் கூட தாமதமாயிருந்தால் அது ஒரு பெரிய பேரழிவாக மாறியிருக்கும்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முழு விபரங்களை அறிந்த பொது மக்கள், யோகேஷ் சவானின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்துள்ளனர். “வீரனே நீ… வாழ்த்துகள்!”, “அந்தக் குழந்தைக்கு இரண்டாவது உயிர் கொடுத்தவர்” எனக் கூறி நெகிழ்ச்சியுடன் அவரது நெஞ்சில் மலர்த்தொடுத்து வருகின்றனர். மேலும் இதோ அந்த வீடியோ,