கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் செல்லதுரை என்பவர், சென்னை எழும்பூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். விடுதி நிர்வாகத்துக்காக சென்னையில் தனியாக தங்கி வருகிறார். அவரது குடும்பத்தினர் கோவையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், எழும்பூரைச் சேர்ந்த உள்அலங்கார வேலைக்காரர் சுரேஷ் (33) என்பவர், சில வேலைகளுக்காக செல்லதுரையிடம் அறிமுகமானார். அவர் மீது நம்பிக்கை வைத்த செல்லதுரை, தனது குனியமுத்தூர் வீட்டு வேலைக்காக சுரேஷை அனுப்பி வைத்தார். அவ்வபோது சுரேஷ் குனியமுத்தூருக்கு சென்று செல்லத்துரை வீட்டு வேலையை செய்துள்ளார்.

சமீபத்தில் செல்லத்துரை, கோவைக்கு சென்று வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் அதிகளவில் நகை மற்றும் பணம் காணாமல் போயிருப்பது தெரிந்தது. ஒரே நேரத்தில் திருடினால் சந்தேகம் வரும் என்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக சுரேஷ் கொஞ்சம் கொஞ்சமாக திருடிவந்துள்ளார்.

அவரால் 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.21 லட்சம் பணம், மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செல்லத்துரை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சுரேஷே திருடன் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.