
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார்.
இவர் தற்போது சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணிபுரிந்து வந்த நிலையில் இவர் காவலர் குடியிருப்பில் மற்றொரு பெண் காவலருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுமதி பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடன் தங்கி இருக்கும் ஜெயலட்சுமி உடன் நீண்ட நேரம் ஆக பேசிக் கொண்டிருந்தார். பின்னர் துணிகளை காயப்போடுவதாக கூறிவிட்டு சுமதி சென்ற நிலையில் நீண்ட நேரமாக படுக்கையறைக்கு வராததால் சந்தேகம் அடைந்த ஜெயலட்சுமி அங்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள ஹாலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் சுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சுமதிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வற்புறுத்தியதால் மனவேதனையிலிருந்து சுமதி தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.