உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பச்தேவ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாட சென்றபோது காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், பீகாரைச் சேர்ந்த சச்சின் என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, சச்சின் அளித்த தகவலின் அடிப்படையில், கிராமத்துக்கு வெளியே உள்ள ஒரு வடிகாலில் இருந்து சிறுமியின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

சச்சின், பீகாரில் உள்ள ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். ஷாஜகான்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்த் சுக்லா என்பவரால் வீட்டு வேலைக்காக ஒரு வாரத்திற்கு முன் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்குப் பின்னர் சச்சினை போலீசார் கைது செய்து, குற்றம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, பிபாரியா பாலம் அருகே சென்றபோது, சச்சின் திடீரென இன்ஸ்பெக்டர் முகேஷ் குமாரின் கைத்துப்பாக்கியை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றார். போலீசார் அவரை முற்றுகையிட்ட போது, அவர் காவல்துறையினரை நோக்கிச் சுட தொடங்கியதாக கூறப்படுகிறது.

தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் மேற்கொண்ட பதிலடி என்கவுண்டரில் சச்சின் காலில் காயம் அடைந்தார். அவரை உடனடியாக ஷாஹபாத் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹர்தோய் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரமான சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 6 வயது குழந்தையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.