
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவருடைய சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பிரபாகரன், தளபதி விஜய் அரசியலில் தன்னை யார் என்று நிரூபித்து காட்ட வேண்டும். விஜயகாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி தேர்தலில் நின்று 12 சதவீத வாக்குகளை பெற்ற பிறகே கூட்டணி வைத்தார்.
அவரைப்போல விஜய் தன்னை அரசியலில் யார் என்று நிரூபித்து காட்ட வேண்டும். அப்படி தேர்தலில் தன்னந்தனியாக நின்று தன்னை யார் என விஜய் அண்ணா நிரூபித்த பிறகு அவரோடு கூட்டணி வைப்பதா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்வோம். எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என்று இப்போது கூற முடியாது. தேர்தலுக்கு முன்பாக எது வேண்டுமானாலும் மாறலாம். அரசியல் சூழலுக்கு ஏற்றது போல எங்களுடைய நிலைப்பாடும் மாறும்.
அதிமுகவுக்குள் நிலவக்கூடிய பிரச்சனையை சரி செய்து அனைவரையும் ஒன்றிணைப்பது தொடர்பாக அவர்கள் முடிவு செய்வார்கள். தேமுதிக பொதுச்செயலாளர் என்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சொன்னார்கள். அவர்களுடைய பேச்சுக்கு இணங்க நான் போட்டியிட்டேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்று விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.