
எதிர்க்கட்சிக்காரங்க மட்டும் இல்ல பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு உள்ளது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம் நாளை விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுத்தது போல அஜித்துக்கும் ஆதரவு கொடுப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எனக்கு நேரமே இல்லை படம் பார்ப்பதற்கு எல்லாம். நல்ல படமாக இருந்தால் சொல்லுங்கள் நானே போய் பார்க்கிறேன். பின் விஜய் கட்சி குறித்த கேள்விக்கு, ஒரு கட்சி ஆரம்பித்த உடன் அதனுடைய முதல் நிர்வாகிகள் அறிவிப்பிலேயே இவ்வளவு தூரம் குளறுபடிகள் இருக்கிறது என்றால் ஒரு அரசியல் இயக்கம் எப்படி அடுத்த பரிமாணத்தை அடையும் என்பது சந்தேகமாக இருக்கிறது.
தமிழக அரசு குறித்து நான் ரெண்டு மூணு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று தமிழக காவல்துறை.. ஒரு சிறு சிறு பதிவுகள் சமூக ஊடகங்களில் வந்தாலே பாய்ந்து போய் இரவோடு இரவாக கைது செய்வது என்பது இன்று இல்ல தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக நடக்கிறது. எங்கள் கட்சியினை சார்ந்தவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது எதிர்க்கட்சிக்காரங்க மட்டும் இல்ல பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு உள்ளது. பிரதமர் மோடி அவர்களை விமர்சிக்காத ஊடகமே கிடையாது. ஆனால் தமிழக அரசு பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. அதுதான் எதார்த்தம் என்று பேசியுள்ளார்.