
திருநெல்வேலியில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுகவினர் மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர் கொடி தூக்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக பாஜக குழுவில் எனது பெயர் இடம் பெறவில்லை என பலரும் கூறியதால் கட்சி தலைமை அது தொடர்பாக முடிவு செய்து இருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழுவின் தலைவர் டெல்லி சென்று இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காததால் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா என்றால் யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி அனுமதி கொடுத்து விட்டால் இது போன்ற பிரச்சினைகள் வராது.
இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அதிமுகவில் நான் பெரும் பதவியில் இருந்து விட்டு தான் பாஜக-வில் இணைந்தேன். எனக்கும் கட்சி பதவி இல்லாமல் இருந்தது. இப்போது சட்டமன்ற குழு தலைவராக உள்ளேன் என அவர் பேசி உள்ளார். நிருபர்கள் தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக குழு நியமிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நைனார் நாகேந்திரன் அதிமுக பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.