திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து பலமுறை கடன் பெற்றதற்கான மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக, அதிக அளவிலான நகைகளை அடகு வைத்து பலமுறை பணம் பெற்றிருந்தார். இதுவரை 130 சவரன் நகைகள் வரை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, 76 கிராம் நகையை மீண்டும் அடகு வைத்து கடன் பெற்றிருந்தார்.

ஆறு மாதங்கள் கழித்து வங்கியின் மேலதிகாரிகள் அவை போலி நகைகள் என சந்தேகித்து மீண்டும் பரிசோதனை செய்தபோது, அதில் 9.5 சவரன் நகை போலி என கண்டறியப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்ட போது சோனாஸ்ரீ  தன் மீது பழி போடுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செய்தி சேனலில் பேட்டியும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து 3 நாட்கள் கழித்து வங்கி தரப்பில், வாடிக்கையாளர் சோனாஸ்ரீ, தங்கராஜ், கருப்பாயி, சுரேந்திரன் உள்ளிட்ட 5 பேரும், போலி நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக வங்கி உதவி பொது மேலாளர் விஞ்சமூரி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வங்கியில் பணியாற்றிய நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமாரும் இதில் உடந்தையாக இருந்தது சிசிடிவி பதிவு மற்றும் வாக்குமூலம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், சோனாஸ்ரீ, கருப்பாயி, தங்கராஜ், சுரேந்திரன் ஆகியோர் போலி நகைகள் அடகு வைத்து கடன் பெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் அவர்களுக்கு துணையாக இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து சோனாஸ்ரீ மற்றும் மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்ற மூவரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போலி நகை மோசடி வழக்கு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மீது நம்பிக்கையுடன் நகைகளை அடகு வைக்கும் கிராம மக்கள், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.