
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாவட்டங்களுக்கு இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.