
தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஜூலை 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ப்ளூடூத் மூலம் மின்னணு தராசு இணைக்கப்பட்ட POS இயந்திரத்தில் ஒரே குடும்பத்துக்கு பொருட்கள் விநியோகிக்க குறைந்தபட்சம் 8 முதல் 10 நிமிடங்கள் ஆகும். இதனால் ஒரு நாளைக்கு சுமார் 50 குடும்பங்களுக்கே விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே மோதல், புகார்கள் ஏற்படுகின்றன.
அதனால் ப்ளூடூத் முறையை முற்றிலும் நீக்கவேண்டும் அல்லது எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டு, ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விநியோகப் பொருட்களில் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும், பழைய POS இயந்திரங்களில் கைரேகை பதிவு வேலை செய்யாமல் இருப்பதாகவும், சனிக்கிழமைகளிலும் நகர்வு பணி செய்ய விற்பனையாளர்கள் திணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 40% மகளிரும், 5% மாற்றுத் திறனாளிகளும் பணியாற்றும் நிலையில், எடையாளர் நியமனம் மற்றும் உதவியாளர் பணியமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வகை நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், போராட்டத்தால் பொதுமக்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.