
ஆசியாவின் பணக்கார கிராமம் குறித்த தகவல் வெளியாகி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுவாக பணக்கார கிராமங்கள் என்று கூறினால் வெளிநாடுகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்போது ஆசியாவின் பணக்கார கிராமம் என்பது இந்தியாவில் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம் அது உண்மைதான். அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள கச் மாவட்டத்தில் மாதபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெரும் பணக்காரர்கள் பலர் உருவாகியுள்ளனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் சுமார் ரூ.7000 கோடி வைப்புத் தொகையை வங்கிகளில் வைத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 32,000 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 17 வங்கிகள் செயல்படுகிறது. இதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அடங்கும் நிலையில் இன்னும் சில வங்கிகள் கிராமத்தில் தங்கள் வங்கி கிளையை தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த கிராமம் எவ்வளவு செழிப்பாக இருப்பதற்கு காரணம் அங்கு வசிப்பவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகும். இங்கு சுமார் 200 வீடுகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 1200 குடும்பங்கள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். குறிப்பாக மத்திய ஆப்பிரிக்காவில் கட்டிட பணிகளில் இந்த கிராமத்தை சேர்ந்த பலர் வேலை பார்க்கிறார்கள். மேலும் இது போக பலர் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் வசிக்கிறார்கள்.