தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் சிலரை மாதந்தோறும் தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான பரிசு பயணிகள் தேர்வு நிகழ்வு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து பணிக்குழுவின் மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் தலைமையில், கணினி குலுக்கல் முறை மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தேர்வான 13 பயணிகளுக்குள், முதல் 3 பேருக்கு தலா ரூ.10,000 மற்றும் மற்ற 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வான பயணிகள் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், பரிசுத்தொகை விரைவில்  வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சி, பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கவும் தமிழக அரசு மேற்கொண்ட ஒரு செயலாகவும் பார்க்கப்படுகிறது