ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்தது மட்டுமில்லாமல், இந்தியா – நியூசிலாந்து டி20 போட்டியை காண அழைப்பு விடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..

மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக கோப்பையை கைப்பற்றியது.இந்தியாவின் டிடாஸ் சாது ஆட்ட நாயகன் விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் தொடர் நாயகன் விருதையும் (மொத்தம் 293 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள்) வென்றனர்.மகளிர் கிரிக்கெட்டில் இந்திய இளையோர் அணி தனது முதல் உலகக் கோப்பை தொடரிலேயே பட்டம் வென்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், உலக கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியில் உள்ளது மற்றும் உலகக் கோப்பை வெற்றி பெண்கள் கிரிக்கெட்டின் அந்தஸ்தை பல படிகள் உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்த அனைத்து வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நிச்சயமாக ஒரு பாதையை உடைக்கும் ஆண்டு என்று தெரிவித்தார்.

மேலும் வெற்றியை கொண்டாடும் வகையில், 1ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியை காண ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பு விடுத்தார்.